மனதிற்கு அமைதி தரும் தீப தியானம்!
இந்த தியானத்தை இருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி, அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள். முறையாக அமர்ந்து கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள்.
மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கு கொண்டு வந்து விடுங்கள்.
மனதை மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ சிந்திக்க விடாதீர்கள். அந்த சுடர் மிகப் பிரகாசமாக இருக்கிறது மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்க்காதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும்.
தீப ஒளியில் மனம் லயிக்க பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடரில் திரும்பக் கொண்டு வாருங்கள்.
நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி ஒருநிலை வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள். தியானத்தை முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது.
சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். அப்போதுதான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ள முடியும். தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும் மாலை ஒரு தியானமும் செய்யலாம்.
தியானம் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நற்காரியங்களில் உறுதியோடு செயற்பட உறுதியான மனநிலையைத் தரும். உங்கள் முகத்தில்’தேஜஸ்’ நிறைந்திருக்கும்.